search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி கொண்டாட்டம்"

    • பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படவில்லை
    • தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழக அரசு அறிவுறுத்தல் படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து பண்டிகையை உற்சா கத்துடன் கொண்டாடினர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விபத்துகளை தடுக்க வேலூர் தீயணைப்பு வடமேற்கு மண்டல துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அனைத்து தீயணைப்பு நிலையங்களில் 24 மணி நேரம் வீரர்கள் தயார் நிலையில் இருந்து கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, தீயணைப்பு வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாட்டத்தில் 7 மாவட்டங்களில் இருந்து 24 அழைப்புகள் வந்தன.

    இதில், 15 ராக்கெட் பட்டாசு, 9 பிற பட்டாசுகள் என சிறு தீ விபத்துகள் ஏற்பட்டன.

    பட்டாசு வெடித்ததில் 86 ஆண்கள், 84 பெண்கள், 5 குழந்தைகள் என 175 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்த சிறுமி நவிஷ்கா (4) பரிதாபமாக உயிரிழிந்தார். பெரிய அளவிலான தீ விபத்து, படுகாயம் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

    • தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
    • மோட்டார்சைக்கிளில் அந்த வாலிபர்களை ஏற்றி செல்வதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையையொட்டி அண்டை மாநிலமான தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு வாலிபர்கள் குவிந்தனர்.

    வழக்கமாக வார இறுதிநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள். அவர்கள் விடுதிகளில் அறை எடுத்து தங்கி ரெஸ்டோபார்களில் குத்தாட்டம் போடுவது, பார்களில் மது அருந்தி கொண்டாடுவர்.

    இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் அதே வேளையில் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து மது அருந்துவதற்காகவே பல இளைஞர்கள் புதுவைக்கு வந்திருந்தனர்.

    இதனால் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் போதை வாலிபர்களின் அட்டகாசத்தை பார்க்க முடிந்தது. புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே வெளியூர் இளைஞர்களின் கூட்டம் அலைமோதியது.

    மாஸ் ஓட்டல் பின்புறம் உள்ள சாலையில் 2 இளைஞர்கள் உச்சகட்ட போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.

    சாலையில் சென்ற பொதுமக்களைஅவர்கள் அடித்து விரட்டினர். தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்தனர்.

    ஆனால் அவர்கள் போலீசாருடன் மல்லுக்கட்டினர். மோட்டார்சைக்கிளில் அந்த வாலிபர்களை ஏற்றி செல்வதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.

    ஒருவரை வாகனத்தில் ஏற்றும்போது மற்றொருவர் இறங்குவதும், போலீசாரின் கைகளை கடிப்பதும் என அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாக அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    இதேபோல நேற்று மதியம் காமராஜர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திச் சென்றார்.

    இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மீண்டும் அந்த போதை ஆசாமி மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல முயன்றார். அவர் செய்த அலப்பறையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அவர் வாகனத்தை எடுத்துச்சென்ற பிறகுதான் போக்குவரத்து சீரானது.

    இதேபோல நகரின் பல பகுதிகளில் போதையில் ஆங்காங்கே வாலிபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். சாலையோரங்களில் மதுபோதையில் மயங்கி கிடந்தனர்.

    மாநில எல்லை பகுதிகளில் உள்ள மதுபார்களிலும் 2 நாட்களாக கூட்டம் அலைமோதியது. மது அருந்தியவர்கள் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தந்த பகுதி போலீசார் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

    • தீபாவளி பண்டிகை கொண்டாடப் படும் விதம் குறித்து மாணவி ஜெய் ஸ்ரீ விளக்கி கூறினார்.
    • நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளி யில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

    மாணவி வைஷ்ணவி வரவேற்றார். தீபாவளி பண்டிகை கொண்டாடப் படும் விதம் குறித்தும், பட்டாசு வெடிக்கும் விதிமுறை குறித்தும் மாணவி ஜெய் ஸ்ரீ விளக்கி கூறினார்.

    தீபாவளி உருவான வரலாறு குறித்து 10-ம் வகுப்பு மாணவி பொன் கீர்த்தனா மாணவர்களுக்கு எடுத்து கூறினார். மாணவி சுதர்ஷினி தீபாவளி குறித்து ஆங்கிலத்தில் உரை ஆற்றினார். மாணவி ஸ்ரீ பவித்தா நன்றி கூறினார். மாணவ - மாணவிகள் தாங்கள் கொண்டு வந்த இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    ஆசிரியர்களுக்கு இனிப்பு மற்றும் போனஸ் பள்ளி நிர்வாகம் சார்பில் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை நித்தியா தினகரன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இந்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • மீண்டும் பழைய உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தருமபுரி,

    கொரோனா பரவல், ஊரடங்கு என கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இந்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    மக்கள் அதிகாலை யிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரி மாறி உற்சாகமாக கொண்டா டினர். இதேபோல் தருமபுரி பகுதியில் அதி காலையிலேயே அதிரடி சரவெடியாக பட்டாசுகளையும் வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி பண்டி கையை குதூகலமாக கொண்டாடினர்.நேற்று முன்தினம் விடிய விடிய தீபாவளி ஜவுளி வியாபாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இதே போல் இறைச்சிக் கடைகளிலும் அதிகாலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளியன்று காலை சிற்றூண்டியிலேயே மட்டன் இருக்க வேண்டும் என விரும்பும் பலரும் ஆட்டுக்கறி கடைகளில் அலைமோதி னர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தீபாவளி பண்டிகை களை யிழந்து காணப்பட்ட நிலையில் இந்தாண்டும் மீண்டும் பழைய உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் பசுமை தீபாவளியைக் கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்துப் பேசியும், அழகாக நடனமாடியும், பல்வேறு மாநிலங்களிலும் இப்பண்டிகை கொண்டாடும் விதத்தை அந்தந்த மாநிலத்தின் உடை அணிந்து அழகாக விளக்கம் அளித்தனர்.

    மேலும் விபத்தில்லாத, மாசற்ற, பசுமை தீபாவளியைக் கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.

    ×